சிவா உயர்தர வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் ஒரு மாணவன். பொறியியல் துறைக்கு தேர்வாகி விடுவேன் எனும் நம்பிக்கையில் பெறுபேறுகளுக்காக காத்திருந்தான். பெறுபேறு கிடைக்கும் வரை பொறியியல் துறையுடன் சம்பந்தப்பட்ட வேறு கற்கை நெறிகளை கற்பது நலம் பயக்கும் என்று எண்ணிய அவனது பெற்றோர் பல வகுப்புகளுக்கு அனுப்பினர்.
உண்மையில் சிவா படிப்பில் கெட்டிக்காரன். அவனது திறமையை பார்த்த பல மாணவ மாணவிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் நேரம் கிடைக்கும் போது வீட்ட வந்து கற்றும் கொடுக்கும் படியும் கேட்பர். சிவாவும் தான் வகுப்புகளுக்கு போகும் நேரம் போக மிகுதி கிடைக்கும் நேரங்களில்
சில பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தான்.
ஆம்! அவனது காலம் கற்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது தான் அவனது வாழ்க்கை திசை திரும்பியது. அவன் செல்லும் வகுப்புக்கு சிவசாந்தி எனும் ஒரு மாணவியும் புதிதாய் வந்து இணைந்துக்கொண்டால். அவளும் படிப்பில் கெட்டிக்காரி. இருவரும் ஒரே துறைக்கு படிப்பவர்கள் என்பதாலோ என்னவோ இருவரும் காலப்போக்கில் காதலர்களாயினர்.
வகுப்பு தவிர்ந்த நேரங்களிலும் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். ஒரே ஈருருளியில் இருவரும் சோடி போட்டுச் சென்றனர். வகுப்பில் சக மாணவர்களது உதவியுடன் அவர்களது காதல் வளர்ந்தது.
சிவசாந்தியின் ஊர் இணுவில். இடப்பெயர்வுக்கு கிளிநொச்சிக்கு வந்து அங்கே ஒரு காணி வேண்டி வசித்து வந்தனர். கிளிநொச்சியும் இராணுவ முற்றுகைக்கு உள்ளானப் பொழுது அங்கிருந்தும் இடம்பெயர்ந்து வன்னியில் அக்கராயன் எனும் பிரதேசத்தில் குடியேறினர். சிவாவின் ஊர் பருத்தித்துறை என்றாலும் நீண்டகாலமாகவே வன்னியில் வாழ்ந்ததால் வன்னியின் மைந்தனாகியிருந்தான்.
சிவாவின் தந்தை கிளிநொச்சியில் தனது தொழில் நிலைக் காரணமாக அங்கேயே இருந்துவிடுவார். என்றாவது ஒரு நாளைக்கு தான் வீட்டுப்பக்கம் வந்து போவார். வீட்டு நிர்வாகம் எல்லாம் சிவாவின் தாயாரே பார்த்து வந்தார். சிவா குடும்பத்தில் கடைசி மகன் என்பதால் அவன் செல்லப்பிள்ளையாகவே வளர்க்கப்பட்டான். இதனால் அவனுக்கு வீட்டில் அளவிற்கு அதிக சுதந்திரம் கிடைத்தது.
இந்த சுதந்திரமே பெரும் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்தது.
மீண்டும் புலிகள் கிளிநொச்சியை மீட்டனர். சனங்கள் மீண்டும் கிளிநொச்சிக்கு சென்று குடியேறினர். சிவசாந்தியின் குடும்பமும் சென்றது.
சிவா வகுப்புக்கு போகின்றேன் என்று கிளிநொச்சிக்கு செல்வதும். இருவரும் சந்தித்துக்கொள்வதும் இரு வீட்டாருக்கும் சந்தேகத்தை உண்டு பன்னி பிரச்சினையில் முடிந்தது. சிவாவின் பெற்றோர் சிவசாந்தியின் வீட்டிற்குச் சென்று பிரச்சினைப்பட்டனர்.
இப்பொழுதுதான் பூதம் வெளிக் கிளம்பியது. சிவசாந்தி கர்ப்பமுற்றிருந்தாள். அவரது பெற்றோர் கலங்கினர். சிவாவின் வீட்டில் வந்து நிகழ்ந்துள்ளதைக் கூறினர். பிரச்சினை மேலும் அதிகமானது. சாதி வெறி தலைத்தூக்கியது. சிவசாந்தியின் சாதியை சுட்டிக்காட்டி இழிவு படுத்தினர். சிவாவின் பெற்றோர் சிவாவை ஊரிலிருந்து வெளியேற்றினர்.
ஒருவர் இன்னொருவரது சாதியை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தியதாக யாரும் காவல் துறையில் புகார் கொடுத்தாலோ அல்லது காவல் துறையாகவே அறிந்துக்கொண்டாலோ அதற்கு தமிழீழச் சட்டப்படி ஏழு நாட்கள் சிறைத்தண்டனை. தப்பித்தவறி யாரேனும் சாதிப் பெயர் குறிப்பிட்டு அழைத்தால் அவருக்கும் 7 நாள் சிறைத்தான். திருமண வாழ்த்து மடல்களில் கூட சாதியை குறிப்பிட்டு அச்சிடுவதற்கு அனுமதியில்லை. சிவசாந்தியின் பெற்றோர் காவல் துறைச் சென்று முறையீடு செய்ய வெளிக்கிட்டனர். ஆனால் சிவசாந்தியோ தடுத்துவிட்டாள்.
அதுவரை சாதி பார்க்கக் கூடாது என்று சமத்துவம் பேசி வந்த சிவாவின் தந்தையும் சாதிவெறியுடன் பேசினார். தனது மகனை நியாயப்படுத்தினார்.
சிவசாந்தியின் பெற்றோர் கதிகலங்கினர். ஆனால் சிவசாந்தி மட்டும் நிதானத்துடன் கூறினார். நான் சிவாவை காணவேண்டும். “சிவாவுடன் உனக்கு என்ன பேச்சு” என்று சிவாவின் பெற்றோர் மறுத்தனர்.
சிவாவின் வீட்ட வந்து, சிவா வீட்டில் இல்லை என்பதை அறிந்துக்கொண்ட சிவசாந்தி “நான் காவல் துறையிடம் முறையிடப்போகின்றேன். சிவா எனக்குத் தந்த கடிதங்கள் எல்லாம் என்னிடம் சாட்சிகளாக இருக்கின்றன” என்றாள்.
சிவாவின் தந்தைக்கு ஓரளவு தமிழீழ சட்டங்கள் தெரியும். அது இலங்கை சட்டத்தைப் போன்று இலஞ்சம் கொடுத்து தப்பிக்கக் கூடிய சட்டங்கள் அல்ல. அவ்வாறு நிகழ்ந்தால் கொடுத்தவர், வாங்கியவர் இருவருமே தண்டிக்கப்படுவர். அவ்வாறான ஒரு செய்தியையே அங்கு யாரும் கேள்வி பட்டிருக்கவே மாட்டார்கள். குற்றவாளிக்கு கருணை மனு எனும் பேரில் தண்டனையை குறைக்க கோரி வக்கீல் வாதிடலாம். ஆனால் குற்றவாளியையே வக்கீல் நிரபராதியாக்க முனைந்தால். வாதிடும் வக்கிலுக்கும் சேர்த்தே தண்டனை வழங்கப்படும். காதலித்து ஏமாற்றப்படும் பெண்ணுக்கு ஏமாற்றியவனின் கைப்பட எழுதிய கடிதங்களே போதுமான ஆதாரம். தமிழீழ காவல் துறையே முன்னின்று திருமணத்தை முடித்து வைத்துவிடும்.
தமிழ் சினிமாவில் போன்று வெட்டருவாள் வீச்சுகத்தியெல்லாம் இங்கு சரிபடாது.
எனவே சிவாவின் தந்தை தயங்கினார். இருப்பினும் சிவாவை வேறு இடத்திற்கு அனுப்பிவைத்து விட்டதில் திருப்தியடைந்தார்.
நாட்கள் மாதங்களாகின. வயிற்றிலேயே குழந்தை வளரத்தொடங்கியது. அதனால் வெளியாட்களுக்கு முகம் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு சிவசாந்தியும் அவர் பெற்றோரும் தள்ளப்பட்டனர்.
காவல்துறையில் முறையிடுவது சிவாவிற்கு ஆபத்து ஏதும் வந்து விடும் என்று எண்ணியதால் சிவசாந்தியின் பெற்றோர் புகார் செய்ய முற்படும் போதெல்லாம் சிவசாந்தி தடுத்து நிறுத்திவிடுவார். கடைசியில் கர்ப்பம் வளர வளர சிவசாந்தியே வேறுவழியின்றி காவல் துறைக்கு சென்று முறையிட வேண்டியதாயிற்று.
காவல் துறை சிவாவின் பெற்றோரை விசாரனைகள் மேற்கொண்டு துருவித்துருவி விசாரிக்கத்தொடங்கியது. “ஐயா தயவு செய்து சொல்லுங்கோ எங்கே உங்கள் மகன்?” சிவாவின் தந்தையோ “சிவா எங்கே என்று தனக்கு தெரியாது” என்றே மறுதளித்தார்.
வன்னி நிலப்பரப்பிலிருந்து யாரும் வெளியேறுவதும் உள்நுழைவதும் மிக இலகுவானதல்ல. அதற்கான பதிவு விபரங்கள் கொடுத்தே யாரும் வெளியேறவோ, உள்நுழையவோ முடியும். சிவா அனுமதிப் பெற்று வெளியேறிய காலமும் நிறைவடைந்து மீண்டும் ஊர் திரும்பாததாலும், சிவாவை பற்றிய விசாரனைகள் அதிகரித்தன.
தமிழீழ காவல் துறை 7 நாட்கள் அவகாசத்தில் சிவாவை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதற்கும் சிவாவின் தந்தை அசைந்து கொடுக்கவில்லை. 7 நாள் அவகாசமும் முடிந்தது. சிவாவை கண்ட இடத்தில் கைது செய்யும் படி காவல் துறை அறிவித்து விட்டதாக கூறியது.
ம்ம்… ம்.. சிவாவின் தந்தை பிடிவாதமாகவே “தெரியாது” என்றார்.
சிவா வன்னிச் சூழலிலேயே வாழ்ந்து பழக்கபட்டவன். வீட்டாரின் பேச்சை மீற முடியாமலும் அவர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாததாலும் வெவ்வேறு இடங்களிலும், உறவினர்களது வீட்டிலும் மாறி மாறி இருந்தான். கொழும்பு பிரதேசங்களிற்கும் அவனால் செல்ல முடியாது யுத்த வடுக்களே அவனை காட்டிக்கொடுத்து விடும். திருக்கோணமலையில் ஒரு உறவினரே இவனுக்கான ஏற்பாடுகளை செய்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
தொடர்ந்தும் சிவாவை காவல் துறையிடம் ஒப்படைக்க தவறிய குற்றத்தால் சிவாவின் தந்தை காலவரையரையின்றி சிவா திரும்பி வரும் வரை சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்.
செய்தி அறிந்த சிவா செய்வதறியாது திகைத்தான். நாட்டை விட்டு வெளியேறவும் ஏற்பாடுகள் நிறைவுபெறும் தருவாயில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இரவில் அவன் இருந்த வீடு வந்த சில ஆயுததாரிகளால் அவன் மடக்கி பிடிக்கப்பட்டான். அடுத்த நாள் வன்னி காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டான்.
அவனுக்கு நாட்டைவிட்டு வெளியேற ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருந்தவரும்
வன்னிக்கு பிடித்து செல்லப்பட்டார்.
சிவாவை காவல் துறையினர் நையப்புடைத்தனர். சிவசாந்தி சிவாவை அடிக்க வேண்டாம் என்று அழுதாள். இருவரையும் திருமணம் முடித்து வைக்கும் படி இரண்டு குடும்பங்களுக்கும் காவல் துறை கட்டளை இட்டது. சிவாவை ஏற்பதோ மறுப்பதோ சிவசாந்தியை பொருத்தது. சிவசாந்தி சிவாவை மறுக்கும் பட்சத்தில் சிவசாந்தியின் வாழ்நாளுக்குமான சீவனாம்சமும் குழந்தை வளர்ப்பதற்கான முழு செலவையும் சிவாவே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கட்டளையிட்டது.
சிவசாந்தியின் மன்றாடலின் பின் சிவசாந்தியின் வயிற்றில் வளரும் குழந்தையின் காரணமாக சிவாவை விடுவிக்கப்பட்டது. சிவாவை மன்னித்து சிவசாந்தி இல்லற வாழ்வில் இணைந்தனர்.
சிவாவின் தந்தை பிழைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக ஆறுமாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
சிவாவை தப்பிக்க உதவ முயற்சித்த குற்றத்திற்காக சிவாவிற்கு இருப்பிடம் வழங்கியவருக்கும் ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
//ஒருவர் இன்னொருவரது சாதியை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தியதாக யாரும் காவல் துறையில் புகார் கொடுத்தாலோ அல்லது காவல் துறையாகவே அறிந்துக்கொண்டாலோ அதற்கு தமிழீழச் சட்டப்படி ஏழு நாட்கள் சிறைத்தண்டனை.//
உண்மையில் தமிழீழ சட்டத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நிர்சன்.
எம்மினத்தின் சிதைவுகளுக்கு முக்கிய காரணியான “சாதி”
ஒழிக்கப்படவேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது.
அவற்றை இல்லாதொழிக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்கி அதற்கு செயல் வடிவம் கொடுக்கப்பட வேண்டும்.
தமிழ் எனும் ஓர் இனம் உன்னதம் அடைவதற்கு இதுவே வழி.
!!!
செய்தியாகப் படிப்பதை விட இப்படி உண்மை நிகழ்வுகளை அறிய வியப்பாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
//குற்றவாளிக்கு கருணை மனு எனும் பேரில் தண்டனையை குறைக்க கோரி வக்கீல் வாதிடலாம். ஆனால் குற்றவாளியையே நிரபராதியாக்க முனைந்தால். வாதிடும் வக்கிலுக்கும் சேர்த்தே தண்டனை வழங்கப்படும்.//
புரியவில்லை.
வழக்கு நடைபெறும்போது யார் குற்றவாளி என்று எப்படி தெரியும்?
நீதிமன்றத்தை பொறுத்தவரை இரு தரப்புக்களே உண்டு. வழக்குரைஞர்களுக்கும் அப்படியே.
தீர்ப்பின்போதுதான் எந்தத்தரப்பு குற்றவாளி என்று தெரியவரும்.
பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுக்கொடுப்பதில் இத்தனை முனைப்பாக இருந்தமை, தமிழீழ காவல் துறைபற்றிய வியப்பையே தருகிறது. மகிழ்ச்சி.
//ஒருவர் இன்னொருவரது சாதியை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தியதாக யாரும் காவல் துறையில் புகார் கொடுத்தாலோ அல்லது காவல் துறையாகவே அறிந்துக்கொண்டாலோ அதற்கு தமிழீழச் சட்டப்படி ஏழு நாட்கள் சிறைத்தண்டனை.//
உண்மையில் தமிழீழ சட்டத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
உங்கள் வருகைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக நன்றி ரவிசங்கர், மு. மயூரன், பாபு அவர்களுக்கு.
மிகச் சிறந்த பதிவு. தமிழினதின் மிகப் பெரும் எதிரியாக விளங்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்க கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் தமிழீழக் காவல் துறையினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகுக.
அவர்களின் உடன் நடவடிக்கைத் திறன்களுக்கும் சான்று கூறுகிறது இப் பதிவு.
உங்கள் கருத்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி விக்ரம்.